7/02/2009

நானறிவேன் அம்மா





நானறிவேன் அம்மா !


இதயம் வருடும்
காதலை விட
இதயம் துடிக்கச் செய்த
தாய்மை பெரிது.....!

மனதை மயக்கும்
காதலை விட
மண்ணில் தவழச் செய்த
தாய்மை பெரிது....!

நானறிவேன் அம்மா!

சிலநாளாய் இதயத்தில்
சுமக்கும் காதலைவிட
பத்துமாதம் கருவில்
சுமந்த தாய்மை பெரிது !

இதயத்திற்கு சிம்மாசனமிடும்
காதலை விட
ஆன்மாவிற்கு கோவில் கட்டிய
தாய்மை பெரிது..!

நானறிவேன்அம்மா !


எனை(நான்) விரும்பும்
காதலை விட
எனை உயிராக்கிய
தாய்மை பெரிது..!

கண்களால் இணைக்கும்
காதலை விட
இரத்தத்தால் பிணைத்த
தாய்மை பெரிது..

நானறிவேன் அம்மா!

உனை வருத்தி என்
இணை தேட நான்
முயலவில்லை..

இதுவே பொருத்தமென
நீ காட்டு...
காதலிக்கிறேன் ..
நானும் தாய்மை உணர.....!

10/04/2007

திருத்த முடிந்தால் .....


உன் காதலை
நான்
உணராமலில்லை...

உன் நினைவுகள்
என்னைச் சுற்றி
வருவதும்
தெரியாமலில்லை...

நானே
உன் வாழ்வில்
வசந்தமென்ற
உன் நினைப்பும்
புரியாமலில்லை...

என் கடைக்கண்
பார்வை ஒன்றுக்காக
பல நாளாய்
காத்திருக்கிறாய்
என்பதையும்
அறியாமலில்லை....

ஆனால்..
என்ன செய்வது சொல்
என் இனிய நண்பனே ???

காதல் என்பதையே
சமூகக் குற்றமாய்
எண்ணும்
இந்த சமூகத்தை
உன்னால்
திருத்த முடிந்தால் சொல்.........

நானும் உன்னைக்
காதலிக்கிறேன்....

4/04/2007

இதயத்துள் நீ !


இன்று...
நீ என் இதயத்தில்
வார்த்தை
முட்களை
விதைக்கிறாய் !
வருத்தமாக இருக்கிறது..!

எனக்கு வலிப்பதால் அல்ல!
நீ

முதன்முதலில்

உன் பாதம் பதித்து வரும்போது..
உனக்கு வலிக்குமே என்று ...!

அறிவாயா???


நீ உன் வார்த்தைகளால்
பிழிந்து போட்ட
என் மனதில் தான்
எத்தனை
சோகச் சுருக்கங்கள்
அறிவாயா????

1/22/2007

எதிர் கொள் !


உயிர் துறக்க ஒரு
சில நிமிடங்கள் போதும்..

உயிர் கொடுக்க ஒவ்வொரு
அன்னையும் மறுபிறவி எடுப்பதை
எண்ணிப் பார் !

நீ வெறுமையைக் கொண்டாடுகிறாய்...
வாழ்வை மரணத்தின் கையில் கொடுக்கிறாய்...

நம்பிக்கை எனும் சிறகை உணர் !

கண்ணீர்த் துளிகளை
வார்த்தைகளாக்கி வாதாடு !

துணி்ந்தால் கடல்நம்
காலைத் தொட்டுக் கும்பிடும் !
பயந்தால்
பனித்துளி கூட
மூழ்கடித்து விடும் !

எதிர்கொள் !!!

மரணத்தின் முன் உன்
இறுதி நேர துணிவை
வாழ்வின் மீது திருப்பு !

வாழ்க்கை நாட்கணக்கல்ல..
செயல் கணக்கு...

நல்லதும் கெட்டதும்
உலகத்தில் இல்லை
உள்ளத்தில் தான் !!!

12/26/2006

உன்னால்


உறக்கத்தை எதிர்நோக்கியே
விழித்திருக்கிறது என் மனம் ...

கனவில் மட்டுமே உன்
நேசக்கரங்கள் நீள்வதால் !!!

11/12/2006

அந்த தருணம்...


ஒரு முறை தான் நிகழ்ந்தன என்றாலும்
ஓராயிரம் முறை
மனதிற்குள் ஒளிபரப்பி
அதே சிலிர்ப்பை..
அதே சுகத்தை....
அனுபவித்திருக்கிறேன்....

இதோ ...மறு ஒளிபரப்பு ...

முகத்தில் பூரிப்பு வழிய
சந்தோசக் கீற்றுகள்
கண்களில் மின்னலடிக்க...
இப்பரந்த உலகில்
இந்நிமிடம் என்னைவிட யாரும்
இத்தனை இன்பமாய்
இருந்துவிட இயலாது
என்ற இறுமாப்பு
இதயம் முழுக்க நிரம்பிய
அந்த தருணம்....

ஓருடலில் ஈருயிராய்
சில மாதங்கள்
என்னுள் நி்றைந்த
புதிய உயிரின்
முதல் அழுகுரல்
காற்றைக் கிழித்துக்கொண்டு
கேட்ட தருணம்......

இரத்தமும் பனிநீருமாக
ஒரு பஞ்சுப் பொதிபோல்
தொப்புள் கொடியறுத்த
குழந்தையை
நெஞ்சில் சுமந்த
அந்த தருணம்....

ஒரு முறை தான் நிகழ்ந்தன என்றாலும்
ஓராயிரம் முறை
மனதிற்குள் ஒளிபரப்பி
அதே சிலிர்ப்பை..
அதே சுகத்தை....
அனுபவித்திருக்கிறேன்....

11/02/2006

காதல் நுழைந்த கணம்

10/19/2006

கனவில் மட்டுமே

உறவென்று
எண்ணி உறவாட
நீ மட்டுமே எனக்கு...

என் உள்ளம் நெகிழ
வைத்த இசையை
நீயும் ரசிக்கிறாய்.....

எனை பாதித்த கவிதை
உனையும்
ஈர்த்திருக்கிறது.....

என் மனக் குமுறலுக்கு
செவி சாய்த்து
சிறு அணைப்பில் எனை
பரவசப் படுத்துகிறாய்...

துன்பத்தில் அழும்போது
மெளனமாய் புன்னகையில்
மனதை லேசாக்குகிறாய்....

உன் மெல்லிய விரல்கள்
தலை கோதிவிட
மடியில் முடங்கித்
தூங்கிப் போகிறேன்
நிம்மதியாய்....

கனவில் மட்டுமே நினைவாகிப்
போன நீ...
கனவை நினைவாக்க
என்று வருவாய்...?

காத்திருக்கிறேன்
கண்களில் காதலோடு...!




10/16/2006

உனக்காக...